நண்பனையும் சாதூர்யமாக கைவிட்ட மகிந்த : தான் செய்ததும் குற்றமே இல்லை என்கின்றார்

இம்முறை விமல் வீரவன்சவை நான் காப்பாற்ற போகப்போவதில்லை, அதற்காக வேறு நபர்கள் இருக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையான மகிந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

மேலும், இதற்கு முன்னரும் விமல் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவரின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்த நீங்கள் இப்போது அவருக்கு உதவி செய்யப் போவதில்லையா? என மகிந்தவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு “இம்முறை அவருக்கு நான் உதவவேண்டிய அவசியம் இல்லை. அதற்கு ஆட்கள் இருக்கின்றார்கள்.

அதேபோன்று அவருக்கு உதவ பாரிய அளவில் மக்கள் தொகையும் எழுந்துள்ளனர் அவர்கள் பார்த்துக்கொள்ளுவார்கள்.

விமலுக்கு பிணை மறுக்கும் அளவிற்கு நீதிமன்றம் ஏன் நடந்து கொள்கின்றது என்பது தெரியவில்லை எனவும் மகிந்த பதில் அளித்தார்.

தொடர்ந்து, நான் தவறு செய்ய வில்லை சாட்சியம் அளிக்கவே வந்துள்ளேன். இப்போதைய அரசு பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது.

இப்போதைய இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் நடைபெறுவதைப் போன்றே எனது காலத்திலும் நடைபெற்று கொண்டு வந்தது.

அதன் காரணமாக அதனை குற்றம் என்றும் கூற முடியாது. முடியுமானால் இப்போது ரூபவாஹினி முறையாக நடைபெறுகின்றதா எனக் கூறுங்கள் பார்க்கலாம் எனவும் மகிந்த தெரிவித்தார்.