ஜனாதிபதிக்கு முதுகெலும்பு இருந்தால் இதனை செய்ய வேண்டும் – ஜீ.எல்.பீரிஸ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முதுகெலும்பு இருந்தால், ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கை தொடர்பான யோசனையின் 6வது பந்தியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாளைய தினம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பான தீர்மானத்தை இலங்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்க உள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை சம்பந்தமான நிறைவேற்றப்பட்ட யோசனையில் வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்றுக்கொள்வதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அது இரண்டாவது முறையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெனிவா யோசனைக்கு இணை அனுசரணை வழங்க வேண்டாம் என ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க சட்டத்தில் இடமில்லை என பிரதமர் அண்மையில் கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையில், அது பற்றி பேசுவது அதியுயர் சட்டத்திற்கு முரணானது எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.