நோகாமல் நோன்பு கும்பிட நினைக்கும் தீபா… தங்க தாம்பாளத்தில் அப்படியே தரனுமாமே!

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு தான்தான் என்றும் இரட்டை இலை சின்னம் தனக்குதான் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளருமான தீபா குறிப்பிட்டார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு, பல்வேறு மாற்றங்களும் நிகழ்ந்தன. இதன் உச்சகட்டமாக அதிமுக இரண்டாக பிளவுபட்டு சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அவரது அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவையை தொடங்கினார். இதில் தாமத முடிவுகள், செயல்பாடுகளில் சுணக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஆமை வேகத்திலேயே பணிகள் நடந்தன.

கணவன்- மனைவி இடையே
இந்நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு, நிர்வாகிகள் தேர்வில் குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் கணவர் மாதவன் தனி கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். ஆர்.கே. நகர் தேர்தலில் சேவல் சின்னம் தனக்கு தான் என்று தீபா கூறினார்.

இரட்டை இலை சின்னத்துக்கு
இரட்டை இலை சின்னத்தை பெற ஓபிஎஸ் தரப்பினரும், சசிகலா தரப்பினரும் மன்றாடி வருகின்றனர். தேர்தல் ஆணையத்தில் பக்கம்பக்கமாக மனுக்களை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நாளை இறுதி முடிவை எடுக்க போகிறது.

நோகாமல்…

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் தி.நகரில் வீட்டுக்கு இருந்தபடியே இரட்டை இலை சின்னம் எனக்கு தான் சொந்தம் என்றும் அத்தையின் அரசியல் வாரிசு தான்தான் என்றும் தீபா கூறி வருகிறார். மேலும் இரண்டரை தொண்டர்கள் தேர்தல் நடத்தியே ஒருவரை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய முடியும். எனவே சசிகலாவின் தேர்வு செல்லாது என்றும் கூக்குரலிடுகிறார்.

அரசியல் வாரிசு…
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு தான்தான் என்று வாக்காளர்கள் அங்கீகாரமளித்து தன்னை வெற்றிபெற வைப்பார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு தனக்கு கிடைக்கும் வெற்றியின் மூலம் இரட்டைஇலை சின்னத்தை தனக்கே சொந்தம் என்பதை நிரூபிக்க போவதாகவும் தீபா தெரிவிக்கிறார்.

எத்தனை போராட்டம்…
பல்வேறு போராட்டகள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என அத்தனையும் பல ஆண்டுகளாக நடத்தியும் பெரிய பெரிய அரசியல் கட்சித் தலைவர்களால் தங்களது கோரிக்கைகளை சட்டரீதியாகக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. ஆனால், வீட்டுக்குள் இருந்தபடியே மக்களையும் சந்திக்காமல், போராடவும் திராணி இல்லாமல், எங்கே வேகமாக பேசினால் உளறி கொட்டிவிடுவோமோ என்ற பயத்தில் ஆமை வேகத்தில் பேசும் தீபா, இரட்டை இலை எனக்குதான், அத்தையின் அரசியல் வாரிசு நான்தான் என்றால் எப்படி? இது தீபாவுக்கே அபத்தமாக தெரியவில்லையா?