டி.என்.ஏ பரிசோதனை மூலம் கிம்-ஜாங்-நம் உடலை உறுதி செய்தது மலேசியா

டி.என்.ஏ பரிசோதனை செய்ததன் மூலம், உயிரிழந்தது வடகொரிய அதிபரின் சகோதரர் கிம்-ஜாங்-நம் என்பதை மலேசிய அரசு உறுதி செய்துள்ளது.

வடகொரிய அதிபர் சகோதரர் கிம்-ஜாங்-நம் கொலை செய்யப்பட்டது டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிம்-ஜாங்-நம்மின் குழந்தைகளின் டி.என்.ஏ. உடன் கிம்-ஜாங்-நம்மின் டி.என்.ஏ ஒத்துப்போனதால் உயிரிழந்தது அவர் தான் என்பதை மலேசிய அரசு அதனை உறுதி செய்துள்ளது.

வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னின் அண்ணன் கிம்-ஜாங்-நம்(46), மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் ‘விஎக்ஸ்’ என்னும் ரசாயனத்தை பயன்படுத்தி கடந்த மாதம் 13-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில், இந்தோனேசிய பெண் சிட்டி ஆயிஷா (25), வியட்நாம் பெண் டொன் தி ஹூவாங் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது முறைப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிம்-ஜாங்-நம் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகியும், இன்னும் அவரது குடும்பத்தினர் யாரும் அவரது உடலை உரிமை கோரவில்லை. மேலும் அந்த உடல் கிம்-ஜாங்-நம்-மின் உடல்தான் என உறுதிப்படுத்தாதவரை சடலத்தை பெறப்போவதில்லை என வட கொரியா தெரிவித்தது. எனவே கொல்லப்பட்ட நபர் கிம்-ஜாங்-நம் தான் என்பதை அவரது மகனின் டி.என்.ஏ-வை வைத்து ஒப்பீடு செய்து உறுதிப்படுத்த மலேசிய துணை பிரதமர் அகமது ஹமிதி முடிவு செய்தார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற டி.என்.ஏ. பரிசோதனையில் கிம்-ஜாங்-நம் கொல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.