முதலில் பிரகார வலம் வருவது சரியா?

பொதுவாக ஆலயங்களுக்குச் செல்லும் பலரும், கருவறையில் உள்ள இறைவனை வணங்கிய பிறகுதான் பிரகாரத்தை வலம் வருகிறார்கள். ஆனால் அப்படிச் செய்வது சரியான வழிபாட்டு முறை அல்ல. எப்போதும் கோவில் பிரகாரத்தை வலம் வந்த பிறகே, கருவறைக்குச் சென்று இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது. அது யாதெனில், நாம் ஆலயங்களுக்குச் செல்வது இறைவனை வழிபடுவதற்காகவே.

அந்தச் சிந்தனை நம் மனதை விட்டு அகலாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிரகாரங்களைச் சுற்றி வரும் போது, அடுத்ததாக இறைவனை வணங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே நம் நெஞ்சில் நிறைந்திருக்கும்.

இறைவனை வழிபட்டு விட்டு, பிரகாரத்தை வலம் வரும் போது நமது மனம் சற்று நிலைதடுமாறி வேறு பக்கம் திரும்பிப் போய்விடக் கூடும்.

இந்த உலகில் எங்கே சுற்றினாலும் இறுதியில் அடையப்போவது இறைவனின் சன்னிதியையே என்பதை குறிக்கும் விதமாகவும், பிரகாரத்தைச் சுற்றிய பிறகு இறுதியாக இறைவனை வழிபட வேண்டும் என்ற முறையை முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர்.