இந்தியாவுடனான உறவு தொடர அமெரிக்க மக்கள் ஒன்றிணைந்து நிற்பார்கள்: அமெரிக்கா உறுதி!

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக நேற்று முன்தினம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர், இந்திய அரசின் சார்பில் முதன் முறையாக ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில், அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர் மெக்மாஸ்டரை நேற்று சந்தித்து ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு குறித்த ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. எச்.ஆர் மெக்மாஸ்டரை சில நாட்களுக்கு முன்னர் தான் பாதுகாப்பு ஆலோசகராக டிரம்ப் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகளின் சபைக்கான சபாநாயகர் பால் ரியானை சந்தித்து பேசிய ஜெய்சங்கரிடம், சில நாட்களுக்கு முன்னதாக கான்சாஸ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியப் பொறியாளரின் மரணத்திற்கு தன்னுடைய கண்டனங்களை ரியான் தெரிவித்துக்கொண்டார். அப்போது பேசிய ரியான், “அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான உறவு வேரூன்றி உள்ளது. இருநாடுகளும் வலிமையான ஜனநாயக அமைப்பை கொண்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தியாவுடன் உறவு தொடர்வதற்காக அமெரிக்க மக்கள் ஒன்றிணைந்து நிற்பார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், ஜெய்சங்கரின் தனது அமெரிக்கப் பயணத்தில், இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை பாதித்துள்ள எச்1பி விசா மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அந்நாட்டு வெளியுறவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உயரதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார்.