ஜெ. மரணம் : புதிய தகவலோடு தமிழிசை!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் வெளியே சொல்ல முடியாத ஏதோ ஒன்று நடந்துள்ளது என மருத்துவரும், தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

ஜெ.வின் மர்ம மரணம் குறித்து ஓ.பி.எஸ், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் சந்தேகம் கிளப்பி வருகின்றனர். இந்நிலையில் இதுபற்றி தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்த போது “ தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஒரு நோயாளியின் உடல் நிலையை நிமிடத்திற்கு நிமிடம் மருத்துவர்கள் சோதனை செய்து பதிவு செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

ஜெயலலிதா ஒரு முக்கிய தலைவராக இருந்ததால், அவரது புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என கூறியது நியாயமாக இருக்கலாம். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஏற்றுக் கொள்ள முடியாத பல நிகழ்வுகள் நடந்துள்ளது.

75 நாட்கள் சிகிச்சை எடுத்த அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், நன்றாக சாப்பிடுகிறார் எனவும் கூறப்பட்டது. ஆனால், அப்போது கூட புகைப்படம் வெளியாகவில்லை. அதுதான் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து நீதிமன்றத்தில் கூட அப்பல்லோ நிர்வாகம் தகவல் தர மறுக்கிறது.

ரத்த சொந்தங்கள் கேட்டால் சிகிச்சை தொடர்பான அனைத்து விபரங்களையும் மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும். ஆனால், அவரின் ரத்த சொத்தங்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?

தற்போது சசிகலாவின் பினாமி ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் மீது குற்றசாட்டு இருக்கிறது. அதை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு உண்டு. அதை செய்யாவிடில் மக்கள் மத்தியில் சந்தேகம் இன்னும் அதிகரிக்கும்.

எந்த தவறும் நடைபெறவில்லை எனில், வெளிப்படையாக கூற ஏன் தயக்கம்? எதையும் சொல்ல முடியாது எனில், ஏதோ ஒன்று நடைபெற்றிருப்பதாக மக்கள் நினைக்கத் தோன்றும். ஒன்று ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” என அவர் கூறினார்.