இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புனேவில் நடைபெற்றது. மூன்று நாட்களுக்குள் முடிவடைந்த இந்த டெஸ்டில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா அணியின் ஓ’கீபே 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
முதல் ஓவரில் இருந்தே பந்து டர்ன் ஆகும் வகையில் ஆடுகளம் தயார் செய்யப்பட்டிருந்தது. இதற்கு முன்னாள் வீரர்கள் எதிர்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஹர்பஜன் சிங் குற்றம்சாட்டிள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிக்கான உண்மையான ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஓ’கீபே எப்படி பந்து வீசுகிறார் என்பதை பார்க்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு ஆடுகளம் கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடைசி நாளான ஐந்தாவது நாள் வரை செல்ல வேண்டும். எந்தவொரு பந்து வீச்சாளரும் இதில் பந்து வீசி விக்கெட்டுக்களை வீழ்த்தும் வகையில் உள்ளான இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களால் விளையாட முடியாது.
நான் 100 டெஸ்டிற்கு மேல் விளையாடிள்ளேன். ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்த நான் எவ்வளவு விடாமுயற்சி எடுத்திருப்பேன் என்பது எனக்குத் தெரியும். இதுபோன்ற ஆடுகளத்தை தயார் செய்யும்போது, எதிரணிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இதுதான் புனேவில் நடைபெற்றுள்ளது.
நான் சிறந்த டெஸ்ட் ஆடுகளம் எது என்று சொல்கிறேன் என்றால், முதல் நாளில் பந்து புனே டெஸ்ட் போல் டர்ன் ஆகக்கூடாது. சிறந்த ஆடுகளத்தில் ஓ’கீபே எப்படி பந்து வீசப்போகிறார் என்பதை பார்க்க விரும்புகிறேன். இதுபோன்ற ஆடுகளத்தில் அல்ல. அதற்குப் பிறகு என்னுடைய கருத்தை நான் பதிவு செய்கிறேன்.
புனே போன்ற ஆடுகளத்தில் பிளைட்டாக அல்லது வித்தியாசமாக பந்து வீச வேண்டிய தேவையில்லை. பந்தை சற்று வேகமாக வீசி பேட்ஸ்மேன்கள் விளையாட முடியாமல் மட்டும் செய்தால் போதுமானது. 6 பந்துகளை ஒரே இடத்தில் வீசினால் அனைத்து பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தலாம்.
புனே டெஸ்டிற்குப் பிறகு எனது கணிப்பு தவறாகிவிட்டது. இதனால் சமூக வலைத்தளங்களில் என்னை கிண்டல் செய்து வருகிறார்கள்’’ என்றார்.