பாவனாவுக்கு பாலியல் தொல்லை: நடிகர் சங்கம் கண்டனம்!

தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் பொன்வண்ணன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

“நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஒட்டுமொத்த பெண் இனத்துக்கு எதிரான வக்கிரம செயல். பெண் இனம் மனிதாபிமானமற்ற ஆண்களால் தவறாக நடத்தப்படுவதை எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து காரில் பயணம் செய்த பாவனாவை டிரைவர் உதவியுடன் சிலர் கடத்தி இருக்கிறார்கள். இந்த சம்பவத்தை கேள்விபட்டதும் மலையாள நடிகர் சங்கத்தினருடன் தொடர்பு கொண்டு பேசினோம்.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேரள முதல் மந்திரிக்கும் காவல்துறைக்கும் நடிகர் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பினோம். பாவனாவை கடத்தியது பணத்துக்காகவா? முன்விரோதம் காரணமாகவா? பழிவாங்கும் நோக்கிலா? என்பதை போலீசார் விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும். குற்றவாளிகள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சம்பவத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள நவீன தொழில் நுட்பங்கள் அதிகமாக இருக்கிறது. அவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பயணத்திலும் பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். வாடகை காரில் பயணம் செய்யும் பெண்கள் அந்த டிரைவரின் அனைத்து பின்னணியையும் அறிந்து கொள்ள வேண்டும்.

நடிகைகள் இரவு நேரத்தில் படப்பிடிப்புகளை முடித்து விட்டு விமான நிலையத்துக்கு 4 மணிநேரம் காரில் பயணம் செய்து வரவேண்டி இருக்கிறது. அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். எண்ணூரில் ஒரு சிறுமிக்கு நேர்ந்துள்ள கொடுமையும் அதிர்ச்சி அளிக்கிறது. இதில் தொடர்புள்ள குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.