மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத், இவர் ஜமாத்- உத்-தவா அமைப்பின் தலைவராக இருக்கிறார். இவரது தலைக்கு அமெரிக்கா ரூ.6 கோடி பரிசு தொகை வழங்கியுள்ளது.
இவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி பாகிஸ்தானிடம் இந்தியா பல தடவை வற்புறுத்தி கேட்டது. அதற்கு பாகிஸ்தான் மறுத்து விட்டது.
இந்த நிலையில் கடந்த மாதம் (ஜனவரி) 30-ந் தேதி தீவிரவாத தடுப்பு சட்டத்தில் ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் வீட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு ஹபீஸ் சயீத்தின் சகோதரர் ஹபீஸ் மசூத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்த அழுத்தம் காரணமாகவே சயீத் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அரசின் தீவிர கண்காணிப்பில்தான் ஜமாத்-உத்-தவாவின் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
இதற்கிடையே ஜெர்மனியின் முனீச் நகரில் தீவிரவாத எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும் போது, “ஹபீஸ் சயீத் பாகிஸ்தானுக்கும், சமுதாயத்துக்கும் அச்சுறுத்தலாக திகழ்கிறார்” என்றார். அவரது இப்பேச்சு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.