ரூ.10 கோடி அபராதத்தை இன்னும் கட்டாத சசிகலா… சொத்துக்கள் ஜப்தி எப்போது?

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் தலா 10 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். இந்த அபராதத் தொகையை இன்னும் சசிகலா தரப்பு கட்டவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்றும் 4 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும், 10 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றும் கடந்த 14ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, 15ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரூ.10 கோடி செலுத்தவில்லை
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, தனக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை இன்னும் கட்டவில்லை. நீதிமன்ற தீர்ப்பு வந்த உடன் அபராதத்தை கட்டிவிட வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் நீதிமன்றம் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்தி எப்போது?

நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டால் உடனடியாக அது செலுத்தப்பட வேண்டும். அப்படி கட்டாமல் போனால் வருவாய் துறை மூலமாக, அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது குற்றவாளியான சசிகலா பெயரில் உள்ள சொத்துக்களை பொது ஏலத்தில் விடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிடும் என்று வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வழக்கில் இல்லாத சொத்து
அபராதம் செலுத்தத் தவறும் போது, வருவாய் துறை மூலமாக வழக்கில் சேர்க்கப்படாத சொத்துக்களும் ஏலத்தில் விடப்படும். அதற்கான உத்தரவு அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுவார். பின்னர் ஏலம் விடப்பட்டு அபராதத் தொகை வசூலிக்கப்படும்.

அடுத்த நடவடிக்கை?
அபராதத் தொகை கட்டாமல் சசிகலா காலம் தாழ்த்தி வரும் அதே வேளையில், இந்த வழக்கில் சீராய்வு மனு போடுவது குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அபராதத் தொகை செலுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.