ஓபிஎஸ் அலுவலகம் மீது கல் வீசி தாக்குதல்.. போடியில் பதட்டம்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற அலுவலகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அங்கு போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

ஓ.பன்னீர் செல்வம் போடிநாயக்கனூர் தொகுதி சட்டசபை உறுப்பினராக உள்ளார். அவரது அலுவலகம் சுப்புராஜ் நகர் பகுதியில் உள்ளது. இந்நிலையில் போடியில் சசிகலா ஆதரவாளர்கள் நேற்று ஊர்வலம் நடத்தினர். ஊர்வலம் முடிந்த சிறிது நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகத்திற்குள் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது.

அங்கிருந்த நாற்காலிகளை அடித்து உடைத்து கல்வீசியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நகர மாணவர் அணி செயலாளர் ராஜவேல் என்பவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர் லேசான காயம் அடைந்தார்.

அதன் எதிரொலியாக அருகில் உள்ள அ.தி.மு.க. நகர செயலாளர் பாலமுருகன் வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கல்வீசியதாக கூறப்படுகிறது. இதில் வீட்டுக்குள் இருந்த கார் லேசாக சேதம் அடைந்து உள்ளது. இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் விசாரணை நடத்தி வருகிறார்.