சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி இது… கூசாமல் சொல்லும் தம்பிதுரை!

சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். இது சசிகலாவுக்கு கீடைத்த வெற்றி என லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கும், ஓபிஎஸ்க்கும் இடையே ஏற்பட்ட மோதலால் தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக முதல்வர் யார் என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து இன்று மாலை பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது இது தர்மத்தின் வெற்றி என்று அவர் கூறினார். அதிமுக ஆட்சி தொடரும் என்றும் தம்பிதுரை கூறினார். தமிழக மக்களின் நலனுக்காக அதிமுக தொடர்ந்து பாடுபடும் எனவும் தம்பிதுரை தெரிவித்தார்.

ஜெயலலிதா வழியில் ஆட்சித் தொடரும் என்று கூறிய தம்பிதுரை இது சசிகலாவுக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறினார். தம்பிதுரையின் இந்த பேச்சு சசிகலாவை வெறுக்கும் அதிமுக அடிமட்ட தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.