பெங்களூரில் சசிகலா ஆதரவாளர்கள் கார் மீது நடந்த தாக்குதல் நாடகம்? போலீஸ் விசாரணையில் அம்பலம்!!

சசிகலா தரப்பு கார் மீது பெங்களூரில் நேற்று நடைபெற்ற தாக்குதல் திட்டமிட்ட நாடகம் என்பது பெங்களூர் காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் சிறை தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நேற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். மாலை 5.15 மணியளவில் அவர் பயணித்த கார் சிறையை நெருங்கியபோது அவருடன் வந்த ஆதரவாளர்கள் கார்களை மர்ம நபர்கள் அடித்து உடைக்க ஆரம்பித்தனர். மொத்தம் 6 கார்கள் சேதமடைந்தன.

விஷமிகளில் மூவர் போலீசாரிடம் சிக்கினர். விசாரணையில் அவர்களை ஏற்பாடு செய்து தாக்குதல் நடத்த வைத்த தகவல் அம்பலமாகியுள்ளது. சசிகலா தரப்புதான் இந்த ஏற்பாட்டை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தமிழக சிறைக்கு சசிகலா தன்னை மாற்ற நீதிமன்றத்தை அணுக முன்னேற்பாடாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சிறையில் சசிகலாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.