அதிபர் டிரம்புடன் கனடா பிரதமர் ட்ருடீயு சந்திப்பு

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதிபராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு நாட்டு தலைவர்களை டிரம்ப் சந்தித்து வருகிறார். பல நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார்.
இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்பை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடீயு வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது, இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வோம் என்றார். மேலும், மெக்சிகோவை விட கனடா – அமெரிக்கா வர்த்தக உறவு குறித்து கவலை கொள்வதாக கூறினார்.
முன்னதாக, அகதிகள் மற்றும் முஸ்லீம்கள் விவகாரத்தில் டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அப்போது, அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் அகதிகள் தங்கள் நாட்டிற்குள் வரலாம் என்று கனடா அழைப்பு விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.