தவிடு பொடியானது குற்றவாளி சசிகலாவின் முதல்வர் கனவு!

சசிகலா குற்றவாளி என்பதை சுப்ரீ்ம் கோர்ட் உறுதி செய்து விட்டது. இதன் மூலம் முதல்வர் பதவிக்காக வரலாறு காணாத வகையில் முரட்டுத்தனம் காட்டிய சசிகலாவின் கனவு முழுமையாக தவிடு பொடியாகி விட்டது.

பதவிக்காக ஒருவர் இப்படியா அலைவார் என்று அத்தனை பேரும் தமிழகத்தில் கொதித்துப் போயிருந்தனர். அந்த அளவுக்கு சசிகலா கும்பலின் ஆட்டம் தலைவிரித்தாடியது. ஆனால் இன்று உச்சநீதிமன்றம் அவரது ஆட்டத்தை அப்படியே தரைமட்டமாக்கி விட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியை கைப்பற்றினார். ஜெயலலிதாவின் வீட்டைக் காலி செய்யவில்லை. கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு வந்து சேர்ந்தார். கூடவே முதல்வர் பதவிக்கும் வெறித்தனமாக முயன்றார். எம்.எல்.ஏக்களைக் கொண்டு போய் ஒளித்து வைத்தார். ஜெயலலிதா போல தன்னை நினைத்துக் கொண்டு இவர் நடந்து கொண்ட விதம், பேசியது மக்களை முகம் சுளிக்க வைத்து விட்டது.

தமிழக மக்கள் மொத்தமாக வெறுத்த ஒரு நபராக மிகக் குறுகிய காலத்தில் மாறிப் போனார் சசிகலா. அவரது கனவு இன்று முழுமையாக தவிடு பொடியாகி விட்டது. முதல்வர் சசிகலாவாக வலம் வர துடித்த அவர் காலம் பூராவும் குற்றவாளி சசிகலா என்ற அவமானத்துடன் வலம் வரும் நிலை ஏற்பட்டு விட்டது.