ரஜினி வந்தா நல்லது… இல்ல கமல், விஜய், அஜீத் வந்தாலும் ஓகே! பாஜகவின் கணக்கு இது

குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதில் பாஜவுக்கு இணை வேறு யாருமில்லை. அதற்கு சிறந்த உதாரணம் இன்றைய தமிழ்நாட்டு அரசியல்.

ஒரு பக்கம் 7 எம்எல்ஏக்களை மட்டும் வைத்துக் கொண்டு முதல்வராகத் தொடரும் ஓபிஎஸ்… இன்னொரு பக்கம் 127 எம்எல்ஏக்களை கூவத்தூரில் அடைகாத்து வைத்திருந்தும், முதல்வராக முடியாமல் தவிக்கும் சசிகலா. இந்த இருவரையும் அந்தரத்தில் தொங்க வைத்துக் கொண்டு, அரசியலில் அடுத்த கட்ட காய் நகர்த்தல்களைத் தொடர்கிறது பாஜக.

தமிழகத்தில் தங்கள் கட்சியின் முக்கிய மைனஸ், கவர்ச்சிகரமான தலைவர்கள் யாருமில்லை என்பதைப் புரிந்து வைத்துள்ள பாஜக, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது.

எப்படியாவது ரஜினிகாந்தை இழுத்து பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவராக்கிவிட வேண்டும் என்பது அவர்களின் கனவு. ஆனால் அவரோ இவர்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கிறார்.

சரி, ரஜினி வரும்போது வரட்டும்…. அவருக்கு அடுத்த நிலையில் உள்ள நடிகர்களை ஏன் விட்டு வைக்க வேண்டும். அவர்களுக்கும் அழைப்பு விட்டுப் பார்ப்போம் என்று முடிவு செய்து, கமல் ஹாஸன், சரத்குமார், விஜய், அஜீத் ஆகிய நால்வரிடமும் பேசி வருகிறார்களாம் பாஜக தலைவர்கள். இதனை வெளியிட்டிருப்பது பாஜக ஆதரவுப் பத்திரிகையொன்று!

இவர்களில் சரத்குமார் ஏற்கெனவே பாஜகவுக்கு இணக்கமாகப் பேசி வருபவர்தான். கடந்த தேர்தலில் பாஜகவுன் கூட்டணி வைக்க ஒப்புக் கொண்டு, கடைசி நேரத்தில் அதிமுக பக்கம் போனவர். மீண்டும் பாஜகவுடன் நெருக்கமாகியுள்ளார். கமல் ஹாஸன் அவ்வப்போது பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை போன்றவர்களுடன் தொடர்பில்தான் உள்ளார் என்கிறார்கள். அஜீத் மட்டும்தான் இன்னும் பிடிகொடுத்துப் பேசவில்லையாம்.