இந்தியா வரும் ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ் ஆனாலும் ஆச்சர்யம் ஏதுமில்லை: கங்குலி

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் 23-ந்தேதி புனேவில் தொடங்குகிறது.

இந்த தொடர் குறித்து இந்திய அணியில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘இந்திய தொடர் ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. நான் ஏற்கனவே கூறியது போல் கிரிக்கெட்டில் என்னால் சரியாக கணித்து கூற இயலாது. ஆனால், ஆஸ்திரேலியா 0-4 என ஒயிட்வாஷ் ஆனால், நான் கண்டிப்பாக அதிர்ச்சியடைய மாட்டேன்.

கடந்த 25 ஆண்டுகளாக இந்திய அணி சொந்த மண்ணில் சுழற்பந்த வீச்சு மூலம் ஆதிக்கம் செலுத்து வருகிறது. ஒருவர் சென்றால் மற்றொருவர் வந்து கொண்டிருக்கிறார்கள். என்னுடைய காலத்தில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தார்கள். தற்போது அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் உள்ளனர்.

எந்தவொரு சுழற்பந்து வீச்சாளர்களிடம் பந்தை கொடுத்தாலும் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பார்கள். அமித் மிஸ்ரா அணியில் இடம் பிடித்தால் அவரால் வெற்றியை தேடித்தர முடியும். யுவேந்திர சாஹலுக்கு, ஜயந்த் ஜாதவுக்கு வாய்ப்பு கொடுத்தாலும் அவர்களாலும் வெற்றியை தேடித்தர முடியும். இந்தியாவில் சிறப்பாக சுழற்பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டு, சிறப்பாக பந்து வீசினால் வெற்றி பெறுவது எளிதானது.