பன்னீர்செல்வம் தான் என்னை முதல்வராக வலியுறுத்தினார் : சசிகலா அதிர்ச்சி தகவல்

முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்ததற்கான காரணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக சசிகலா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து பேசிய சசிகலா, ஜெயலலிதா மறைந்த உடன், கட்சியின் பொது செயலராகவும், முதலமைச்சராகவும் நானே பொறுப்பேற்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் தான் முதன் முதலில் வலியுறுத்தினார்.

ஆனால், அந்த நேரத்தில் எதையும் ஏற்கும் மன நிலையில் நான் இல்லை. அதிமுகவினர் என்னை தொடர்ந்து சந்தித்து கோரிக்கை வைத்ததால் தான்  கட்சியின் பொது செயலாளராக பொறுப்பேற்றேன்.

அதேபோல், தற்போதும், கட்சியின் பொது செயலராகவும், முதலமைச்சராகவும் ஒருவர் தான் இருக்க வேண்டும் என்ற உங்கள் அனைவரின் கோரிக்கையையும் நான் ஏற்கிறேன்,” என்று சசிகலா கூறினார்.

மேலும்,”ஜெயலலிதா அவர்களின் கனவை நான் முழுமையாக நிறைவேற்றுவேன். மக்களுக்காக தான் இந்த ஆட்சி செயல்படும்,” என்றும் சசிகலா உறுதியளித்தார்.
கட்சிக்கு சோதனை வந்த போதும், ஜெயலலிதா, முதல்வராகத் தொடர முடியாத போதெல்லாம், கட்சி தலைமைக்கு விசுவாசமாகத் திகழ்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம் என்று சசிகலா பாராட்டினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் விரிசல் ஏற்படாதா என்று அரசியல் எதிரிகள்  கண்ட  கனவுகளை பொடிப்பொடியாக்கிய நிர்வாகிகளுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் சசிகலா தெரிவித்தார்.