ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை..! கண்கண்ட சாட்சியத்தின் பின்னுள்ள சோகம்

கடந்த மாதம் 24ஆம் திகதி ஊர்காற்துறை பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் வாய் பேச முடியாத சிறுவன் ஒருவர் கண்ணால் கண்ட சாட்சியமாக இருக்கின்றார். குறித்த சிறுவனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சிறுவனின் குடும்ப பின்னணி தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சிறுவனின் குடும்பம் மிகவும் வறுமையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிறுவனின் தாயார் கருத்து தெரிவிக்கையில், எனது கணவர் நீண்ட காலமாக எம்மை விட்டு பிரிந்து வாழ்கின்றார். எமக்கு மூன்று பெண் பிள்ளைகளும் கடைசி பிள்ளையாக இவன் இருக்கின்றான்.

இவன் சிறு வயதில் வாய் பேச கூடியவன், எனினும், நான்கு வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தின்போது (மாடு முட்டியதில்) அவனது இரண்டு காதுகளும் கேட்காமல் போனதுடன், வாய் பேச முடியாதவனும் ஆகிவிட்டான்.

எனது முதல் மூன்று பெண் பிள்ளைகளையும் வறுமை காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துள்ளேன். இவன் மட்டுமே தற்போது என்னுடன் உள்ளான்.

கைதடியில் உள்ள நவில்ட் பாடசாலையில் சேர்த்தேன். அங்கு 5ம் தரம் வரை கல்வி கற்றான். புலமைப் பரிசில் பரீட்சையில் நல்ல பெறுபேறுகளையும் பெற்றுக்கொண்டான்.

எனினும், பின்னர் பாடசாலை செல்லமாட்டேன் என தெரிவித்து வீட்டில் இருந்துவிட்டான். நான் தினந்தோறும் கூலி வேலைக்கு சென்று வாழ்வாதாரத்தை கொண்டு செல்வபள்.

காலையில் நான் சமைத்து வைத்து விட்டு வேலைக்கு சென்றால் இவன் வீட்டில் இருப்பான். கறி சமைப்பான் அல்லது அயல் வீடுகளுக்கு சென்று வருவான். அப்படியாக அவன் தன் பொழுதை கழித்துக் கொள்வான்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டுக்கும் செல்கின்றவன். அப்படித்தான் சம்பவம் இடம்பெற்ற 24ம் திகதி இவன் அந்த வீட்டிற்கு சென்று போது, அங்கு இருவர் இவனை மிரட்டி துரத்தியுள்ளனர்.

அவர்கள் தான் அந்த பெண்ணை கொலை செய்திருக்க வேண்டும். கொலையாளிகளை என் மகன் கண்டுள்ளான். பின்னர் 27ம் திகதி வீதியில் யாரோ என் மகனை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளனர்.

இதனை நீதிமன்றுக்கு தெரிவித்தோம். அத்துடன் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளளோம். தற்போது எனது மகனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இவனுக்கு ஒரு காது சிறியளவில் கேட்கின்றது. எனவே கேட்கும் திறனை அதிகரிக்கும் கருவியை வைத்தியசாலை சென்று பொருத்தினால் அவனுக்கு கேட்கும் திறன் அதிகரிக்கும். ஆனால் அதற்கு தற்போது எம்மிடம் வசதியில்லை.

இந்த வழக்கு முடிவடைந்து குற்றவாளிகள் அடையாளம் காணப்படும் வரையில் எனது மகனுக்கு பாதுகாப்பாக நான் கூடவே இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் என் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.