சிறுவர்களுக்கான டென்னிஸ் அகாடமி தொடங்கிய சானியா மிர்சா

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கடந்த 2013ம் ஆண்டு ‘சானியா மிர்சா டென்னிஸ் அகாடமி’ என்ற பெயரில் டென்னிஸ் வீரர்களை உருவாக்கும் பயிற்சி மையத்தை தொடங்கினார். இந்த மையம் தெலுங்கானாவின் ரெங்காரெட்டி மாவட்டம் முர்துஜாகுடாவில் அமைந்துள்ளது.

இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள தனது வீடு அருகே குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான டென்னிஸ் அகாடமியை தொடங்கி உள்ளார் சானியா. இந்த மையத்தில் 3 வயது முதல் 8 வயது வரை உள்ள சிறுவர்-சிறுமிகளுக்கு டென்னிஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அகாடமியை தொடங்கி வைத்த சானியா மிர்சா கூறுகையில், ‘சிறு வயதில் நான் டென்னிஸ் பயிற்சி பெற எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்தேன். இதனால் சிறுவர்களுக்கான டென்னிஸ் அகாடமியை தொடங்கி உள்ளேன்’ என்றார்.

“என் தாயார் மற்றும் நண்பர்களின் ஆலோசனையின்பேரில் இந்த மையத்தை தொடங்கியிருக்கிறேன். இது குழந்தைகளை சிறு வயதில் இருந்தே போட்டிக்கு தயார்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. 8 அல்லது 9 வயதின்போது பயிற்சியை தொடங்கும்போது போட்டி கடுமையாக இருக்கும். எனவேதான் மூன்று அல்லது நான்கு வயதிலேயே பயிற்சியை தொடங்க வேணடும்.

தொழில்முறை விளையாட்டு வீரர்கள், மிகப்பெரிய சாம்பியன்களை பார்த்தோமேயானால், அவர்கள் எல்லாம் நான்கு அல்லது 5 வயதிலேயே தங்கள் பயிற்சியை தொடங்கியவர்கள். டென்னிசில் நாங்கள் பெற்ற அனுபவத்தை, மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க எங்கள் குடும்பம் எப்போதும் முயற்சி செய்கிறது. அடுத்த சானியா, அடுத்த மகேஷ் மற்றும் அடுத்த லியாண்டர் என திறமையான வீரர்கள் இங்கிருந்து உருவாக வேண்டும் என காத்திருக்கிறோம். இது டென்னிஸ் விளையாட்டிற்கு எங்களது சிறிய பங்களிப்பு ஆகும்” என்றார் சானியா.