பிரதமர் மோடி மீது கெஜ்ரிவால் பாய்ச்சல்!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அவருக்கும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையே பனிப்போர் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் முறைகேடு இருப்பதாக வருமான வரித் துறை தெரிவித்து இருந்தது.

தணிக்கை அறிக்கையை ஆய்வு செய்ததில் நன்கொடை தொகையில் ரூ.27 கோடி முரணாகவும், தவறாகவும் இருப்பதாக தெரிவித்தது. இதனால் ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு வருமான வரித்துறை பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து பிரதமர் மோடியை ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மோடி துடிக்கிறார். அவர் வெட்கம் கெட்ட சர்வாதிகாரி. மோசமான, அசிங்கமான தந்திரத்தை கையாள்கிறார். கோவா, பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மோசமான தோல்வியை தழுவும்.

வெற்றி பெறும் கட்சியான ஆம் ஆத்மியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முயற்சிக்கிறார்.

இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.