தடுப்புச்சுவர் கட்ட நிதி தரவில்லையெனில் அமெரிக்காவிற்கு வர வேண்டாம் : மெக்சிகோ அதிபருக்கு டிரம்ப் பதிலடி!!

மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல் என்பது சாதாரண நிகழ்வாக உள்ளது. இதனால், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது, தான் வெற்றி பெற்றால் மெக்சிகோவுடனான எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்படும். மேலும், தடுப்புச் சுவர் கட்டுவதற்கான செலவை மெக்சிகோ  ஈடுசெய்ய வேண்டும் என டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
ஜனாதிபதியாக பதவி ஏற்ற டிரம்ப், அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் 3,200 கிலோ மீட்டர் தொலைவில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான உத்தரவை பிறப்பித்தார். டொனால்டு டிரம்ப் உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த மெக்சிகோ
அதிபர் என்ரிக் பெனா நீட்டோ , சுவர்களில் மெக்சிகோவுக்கு நம்பிக்கை இல்ல, இந்த சுவருக்காக மெக்சிகோ எந்தப் பணமும் தராது என கூறியிருந்தார்.
அடுத்த வாரம் மெக்சிகோ அதிபர் நீட்டோ அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், மெக்சிகோ அதிபருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ,”தடுப்புச் சுவர் கட்டுவதற்கு மெக்சிகோ பணம் தர விருப்பம் இல்லையெனில், மெக்சிகோ அதிபர் தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்வதே சிறப்பாக இருக்கும்” என காரசாரமான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
டிரம்பின் இந்த கருத்தால் அமெரிக்கா – மெக்சிகோ இடையே உள்ள விரிசல் மேலும் அதிகரித்துள்ளது.