இறுதி யுத்தத்தின் போது நம்பி ஒப்படைக்கப்பட்டவர்கள் காணாமல் போனமைக்கு அரசாங்கமே பதில் கூற வேண்டும் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் தங்களுக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி சாகும் வரை உண்ணாவிரதத்தினை ஆரம்பித்திருந்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ப.சத்தியலிங்கம் இவ்வாறு கூறியுள்ளார்.
அந்த ஊடக அறிக்கையில்,
கடந்த 30 வருடங்களாக தமிழர் தாயகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பலகட்டங்களிலும் பெருமளவிலானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்களும் சரி போராட்டத்தில் எந்தவித ஈடுபாடுகளும் கொண்டிராதவர்களும் பலவந்தமாக காணமல் செய்யப்பட்டுள்ளனர்.
உலக சட்டங்களை மீறி பல்வேறு தரப்பினரால் இவர்கள் பல சந்தர்ப்பங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் இதற்கான பொறுப்புக்கூறலில் இருந்து அவர்கள் தப்பி விடமுடியாது.
குறிப்பாக 2009 இறுதி யுத்தத்தின் போது அரச படைகளின் வேண்டுகோளிற்கமைய அப்போதைய அரசாங்கத்தை நம்பி தங்கள் உறவுகளை ஒப்படைத்தனர்.
ஆனாலும் இன்றுவரை பலர் உறவினர்களிடம் மீள ஒப்படைக்கப்படவில்லை. எனவே அரசாங்கமானது ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உரிய விசாரணை நடாத்தி உறவினர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்க வேண்டும்.
தமது உறவுகளை தொலைத்த நாளிலிருந்து இன்று வரை அவர்கள் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தேடி அலைந்து வருகிறார்கள்.
எத்தனை போராட்டங்கள், எத்தனை சந்திப்புகள், எத்தனை வாக்குறுதிகள் அனைத்துமே அவர்களின் கேள்விக்கான பதிலை இன்று வரை வழங்கவில்லை.
இதனால் நம்பிக்கை இழந்தே இவர்கள், இன்று தாமாக முன்வந்து தங்கள் உயிரினையும் துச்சமெனமதித்து சாகும் வரையான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இனியும் வேண்டாம் தாமதம். உரிய பதிலை அரசாங்கம் உடனடியாக வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.







