நாமலுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள விமுக்தி! சுதந்திர கட்சியின் கோட்டை உடையுமா?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் மகன் விரைவில் இலங்கை அரசியலில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் ஆசனத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் அரசியலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோட்டையான அத்தனகல்ல தொகுதியை முன்னாள் பிரதமர்களான S.W.R.D.பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் பிரதிநிதித்துவம் செய்துள்ளனர்.

விமுக்தி குமாரதுங்கவின் அரசியல் வருகை தொடர்பில் நேற்று முன் தினம் ஸ்ரீலங்கா சுதந்தர கட்சியின் உயர்மட்ட அமைச்சர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அவர் மஹர தொகுதியில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என கூறப்பட்டதன் பின்னர் அத்தனகல்ல தொகுதியில் தேர்தலில் ஈடுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவின் பேரனும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் மற்றும் பிரபல நடிகரான விஜயகுமாரதுங்கவின் மகனுமான விமுக்தி குமாரதுங்கவின் அரசியல் வருகை தொடர்பில் எதிர்வரும் நாட்களில் வலுவான உரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நாட்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களின் அரசியல் செயற்பாடுகள் அதிகம் பேசப்படும் ஒன்றாக உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து பல்வேறு காய்நகர்த்தலை மேற்கொண்டு வருகிறார். இதற்கான செயற்பாடுகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீவிரமாக செயற்பட்டு வருகிறார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் புதல்வரின் அரசியல் பிரவேசம், மஹிந்தவின் புதல்வர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.