ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கை தயார்!

ஈரானிடமிருந்து மசகு எண்ணை மற்றும் எரிபொருட்களுடன் சம்பந்தப்பட்ட பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்ய இலங்கை விருப்பம் கொண்டிருப்பதாகஅமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜவாட் ஷரீபை அமைச்சர் தெகிறானில் சந்தித்துள்ளார்.

நிதி தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டபின்னர் இரண்டு நாடுகளும் எரிசக்தி தொடர்பில் கூட்டாக செயற்படுவதற்கும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை உட்பட்ட ஆசிய பிராந்திய நாடுகளுடன் அபிவிருத்தி தொடர்பில் முக்கியத்துவம் வழங்கி செயற்படுவதற்கு ஈரான் தயாராக இருப்பதாகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளதாக அமைச்சர் சுசில் கூறியுள்ளார்.

மேலும், ஈரானுக்கெதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகளால் ஏற்பட்டிருந்த பிரச்சினையின் காரணமாக இலங்கைக்கான ஏற்றுமதியில் தடைகள் நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது.