மெஸ்சியை விமர்சித்த அதிகாரியை நீக்குகிறது பார்சிலோனா!

ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான பார்சிலோனாவில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி தொடர்ந்து விளையாடி வருகிறார்.

கோபா டெல் ரெய் தொடரில் அத்லெடிக் பில்பயோ அணிக்கெதிரான போட்டியில் பார்சிலோனா அணி 4-3 என வெற்றி பெற்றது. இதற்கு 78-வது நிமிடத்தில் மெஸ்சி ப்ரீ ஹிக் மூலம் அடித்த கோல்தான் முக்கியமாக காரணமாக இருந்தது. அத்துடன் பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேறியது.

ஆனால் பார்சிலோனா அணியின் அதிகாரி பெரே கிரேடாகோஸ் மெஸ்சி ஆட்டம் குறித்து விமர்சனம் செய்தார். அவர், ‘‘இந்த வெற்றி மெஸ்சி தன்னிச்சையால் வந்ததல்ல. இனிஸ்டா அல்லது நெய்மர் இல்லாமல் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. அவர் அணியின் முக்கியமான வீரர்தான். ஆனால் சுவாரஸ் மற்றும் ஜெரார்டு பிக்யூ போன்ற வீரர்களும் உள்ளனர்’’ என்று கூறியிருந்தார்.

இதனால் பார்சிலோனா அணி கடும் அதிர்ச்சியடைந்தது. அத்துடன் மெஸ்சி குறித்த பெரே கிரேடாகோஸின் கருத்து அவரது தனிப்பட்டது என்று கூறியதுடன் அவர் விரைவில் மாற்றம் செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளது.