நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அஸ்ரப் அசீஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகிய பொறுப்புக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென நான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோருகின்றேன்.
நாட்டில் 58 லட்சம் வாக்குகள் கொண்ட மக்கள் ஆணை மிக்க ஓர் தலைவராக மஹிந்த திகழ்கின்றார். முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் மஹிந்தவினால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.
இவ்வாறான ஓர் பொறுப்பினை உதாசீனம் செய்ய மஹிந்தவினால் முடியாது.
போரை முடிவுக்குக் கொண்டு வந்த மக்கள் தலைவன் என்ற பெருமையை பெற்றுக்கொண்டுள்ள மஹிந்த, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஏனைய இன சமூகங்களினதும் நன்மதிப்பினை ஈட்டிக் கொள்ள முடியும்.
நாட்டுக்கு சேவையாற்றிய தலைவர் என்ற ரீதியில் அரசியல் காரணிகளை கருத்திற் கொள்ளாது, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பு மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என அஸ்ரப் அசீஸ் கோரியுள்ளார்.