நடராஜர் பற்றிய அரிய தகவல்கள்

ரத்னசபாபதி :

பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தில் கலந்துகொள்வதற்காக, தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேரை சத்தியலோகம் அழைத்தார். ‘சிதம்பரத்தில் இருந்தபடி நடராஜரின் திருநடனத்தைக் காண்பதில் தான் எங்களுக்கு இன்பம். யாகத்தில் கலந்துகொள்வதால் எங்களுக்கு என்ன பயன்?’ என்று அவர்கள் பிரம்மாவிடம் கேட்டனர். அப்போது நடராஜர் அந்தணர்களிடம், ‘நீங்கள் யாகத்திற்கு செல்லுங்கள்.

யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றி உங்களுக்கு காட்சிதருவேன்’ என்று வாக்குறுதியளித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை ‘ரத்னசபாபதி’ என்கின்றனர். ரத்னசபாபதியின் சிலை சிதம்பரம் நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 மணி முதல் 11 மணிக்குள் பூஜை நடக்கும். இந்த சிலைக்கு முன்புறமும், பின்புறமும் தீபாராதனை செய்வது வழக்கமாக இருக்கிறது.

உலக ஆதார நடனம் :

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களால் இந்த உலகம் இயங்குகிறது. கடலில் எப்போதும் ஓயாது அலையடித்துக் கொண்டே இருக்கிறது. நெருப்பு தன் ஜுவாலையான நாக்கை சுழற்றி எரிகிறது. காற்று தென்றலாய், புயலாய் வலம் வருகிறது. வானம் இடியாய், மின்னலாய், மழையாய் வர்ணஜாலம் காட்டுகிறது. பூமிப்பந்து தங்கு தடை இல்லாமல் சூரியனை வலம் வந்து இரவையும், பகலையும் உண்டாக்குகிறது.

இந்த இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது சிவபெருமானின் திருநடனம் தான். ஈசன் அசைந்தால் உலகமே அசைகிறது. அவன் அசைவை நிறுத்தி விட்டால் சிறிய அணு கூட அசையும் சக்தியை இழந்து விடும். மனிதன் கருவில் இருக்கும் போதே தொடங்கும் இருதய இயக்கம், அதன் இயக்கத்தை நிறுத்தியதும் மனிதன் இறப்பதைப் போல, நடராஜர் தன் நடனத்தை நிறுத்தினால், உலகம் அழிந்து போகும்.

ஆண்டுக்கு ஆறு அபிஷேகம் :

தில்லை நடராஜப்பெருமானுக்கு, ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்யப்படுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

மாணிக்கவாசகருக்கு சிறப்பு :

திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசகர். திருவாசகத்தை மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல எழுதியவர், அந்தணர் வடிவத்தில் வந்த தில்லை நடராஜபெருமான் தான். திருவாசகத்தை எழுதி முடித்ததும், இறுதியில் ‘மாணிக்கவாசகன் சொல்ல அழகிய சிற்றம்பலம் உடையான் எழுதியது’ என்று திருவாசக ஏட்டில் கையெழுத்திட்டு, சிற்சபையின் பஞ்சாட்சரப் படியில் வைத்து விட்டு இறைவன் மறைந்து விட்டார். திருவாசக ஏட்டைக் கண்ட கோவில் அந்தணர்கள், மாணிக்கவாசகரை அழைத்து திருவாசகத்திற்கு விளக்கம் தருமாறு வேண்டினர். அவரும் தில்லை நடராஜரின் சன்னிதிக்கு வந்து, திருவாசகத்திற்கு பொருளுரைத்து, இறைவனுடன் கலந்தார்.

மாணிக்கவாசகருக்கு சிறப்பு செய்யும் விதத்தில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி திருவாதிரை விழா நடக்கிறது. பத்துநாட்கள் நடைபெறும் இந்த விழாவில், ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் மாணிக்கவாசகர், சுவாமி சன்னிதிக்கு எழுந்தருள்வார். அப்போது திருவாசகம் பாடப்படும். குறிப்பாக திருவெம்பாவைப் பாடல்களைப் பாடுவர். அதன்பின் மாணிக்கவாசகருக்கும், சுவாமிக்கும் தீபாரதனை நடக்கும்.