சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அப்போது, “சென்னைக்கு தேவையான குடிநீரை கிருஷ்ணா நதியில் இருந்து பெறுவதற்காக சென்றிருந்தேன். ஆந்திர முதல்வரை சந்தித்து கூடுதல் நீர் தருமாறு வலியுறுத்தினேன்” என்று கூறினார்.
மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம், ஆனால் நல்ல செய்தி இதுவரை வரவில்லை என்று தெரிவித்தார்.
முன்னதாக, குடிநீர் தேவை பற்றி விவாதிப்பதற்காகவும், தெலுங்கு கங்கை திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ஆந்திர மாநிலத்தின் தலைநகரம் அமராவதிக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை புறப்பட்டுச் சென்றார்.
அங்கு ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் கிரிஜா ஆகியோரும் உடனிருந்தனர்.