கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் நல்லாட்சி அரசாங்கம்!

கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

அரசாங்கத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முதலீடுகளும் வெளிப்படைத்தன்மையுடன் கூடியதல்ல.

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயம், குளியாப்பிட்டி மோட்டார் வாகன பொருத்தும் தொழிற்சாலை போன்ற திட்டங்களில் இந்த விடயம் தெளிவாக தென்படுகின்றது.

நிதி தொடர்பிலான வெளிப்படைத்தன்மையை இந்த அரசாங்கம் பின்பற்றுவதில்லை.

முன்னதாக தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் பற்றி இந்த அரசாங்கம் பேசியது. எனினும் சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை வெளியிடப்படவில்லை.

இதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப் போவதாக அரசாங்கம் கூறுகின்றது.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டியதில்லை அதனை மக்களுக்கே காண்பிக்க வேண்டும்.

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயம், குளியாப்பிட்டி கைத்தொழிற்சாலை ஆகியனவற்றுக்கான முதலீடுகள் எவ்வாறு கிடைத்தது என்பது பற்றிய தகவல்கள் எங்கே?

அரசாங்கம் உண்மையில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டுள்ளது என புபுது ஜாகொட குற்றம் சுமத்தியுள்ளார்.