பாக்தாத் மார்க்கெட்டில் மனிதகுண்டு தாக்குதல் : 11 பேர் பலி!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஜமிலா மார்க்கெட் பகுதி வழியாக சந்தேகிக்கும் வகையில் இன்று காலை வேகமாக வந்த ஒருகாரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.

அங்கு நிற்காமல் தப்பிச் செல்ல காரின் டிரைவர் முயன்றதால் அந்த வாகனத்தின்மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காரினுள் இருந்த தீவிரவாதி கண்ணிமைக்கும் நேரத்துக்குள் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்ட் பொத்தானை இயக்கியதில் அந்தக்கார் பயங்கரமாக வெடித்து சிதறியது.

இந்த தாக்குதலில் 11 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். 35-க்கும் அதிகமானவர்கள் பலத்த காயங்களுடன் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.