1 வருடம் நடந்த ‘பாகுபலி-2’ படப்பிடிப்பு முடிவடைந்தது!

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகிவரும் படம் ‘பாகுபலி-2’. ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது அதன் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே 2-ம் பாகத்துக்கான 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மீதம் உள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு 2015-ம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. ஒரு வருட காலமாக நடந்து வந்த இந்த படப்பிடிப்பு   நேற்று (6-ந் தேதி) பிரபாஸ் சம்பந்தப்பட்ட காட்சியுடன் நிறைவு பெற்றது.

‘பாகுபலி’ இரண்டு பாகங்களையும் சேர்ந்தால் மொத்தம் 613 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. இந்திய திரையுலகில் வேறு எந்த படத்துக்கும் இவ்வளவு நாள் படப்பிடிப்பு நடந்தது இல்லை என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

‘பாகுபலி’ படத்துக்காக மட்டும், பிரபாஸ் தன்னை 3½ வருடங்கள் ஈடுபடுத்திக் கொண்டார் என்று இயக்குனர் ராஜமவுலி மனம் திறந்து பாராட்டியுள்ளார். இத்தனை நாள் ஒரே குடும்பமாக ‘பாகுபலி’ படப்பிடிப்பில் பங்கேற்ற படக்குழுவினர் மனநெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். ஒருவரை ஒருவர் பிரிவது குறித்து வருத்தப்பட்டார்கள். படப்பிடிப்பின் நினைவுகளை பகிர்ந்து   கொண்டபடியே நீண்டநோரம் பேசிக்கொண்டிருந்தனர்.

இது பற்றி இணைய தளத்தில் தெரிவித்துள்ள ராஜமவுலி, ஒரு பூசணிக்காய் படத்தை வெளியிட்டு இன்று ‘பாகுபலி’ படப்படிப்பு நிறைவு, என்று குறிப்பிட்டுள்ளார். இது போல் பிரபாஸ் ஒரு பூசணிக்காயுடன் போஸ் கொடுக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.