சிரியாவில் ராணுவ படைகளை குறைக்க தொடங்கி விட்டோம்: ரஷியா அறிவிப்பு!!

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு, மார்ச் 15-ந் தேதி உள்நாட்டுப்போர் தொடங்கியது. தொடர்ந்து 6-வது ஆண்டாக நடைபெற்று வரும் இந்த உள்நாட்டுப் போரில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதில் அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைக்கு ஆதரவாக ரஷியா ராணுவப் படைகள் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது. ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவும் அவ்வவ்போது எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் ரஷியா, துருக்கி ஆதரவுடன் இரு தரப்புக்கும் இடையே கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. போராளி குழுக்கள் மற்றும் சிரியா அரசு பிரதிநிதிகளிடையே இந்த மாதம் கஜகஸ்தான் நாட்டில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ரஷியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் இந்த முயற்சியை ஆதரித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கடந்த முதல் தேதி தீர்மானம் கொண்டு வரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், சிரியாவில் உள்ள தனது ராணுவ படைகளை குறைக்க தொடங்கி இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறுகையில், “அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக சண்டையிட்டு கொண்டு இருந்த பகுதிகளில் இருந்து எங்களது ராணுவ படைகள் நாடு திரும்புகிறது” என்றார்

கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்த ரஷியாவின் விமான தாங்கி கப்பல் திரும்ப பெற தொடங்கி உள்ளதாக அந்நாட்டு தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு ஒருமுறை படைகளை திரும்ப பெறுவதாக கூறிய ரஷியா, அந்த வாக்குறுதியை காப்பாற்ற தவறியது குறிப்பிடத்தக்கது.