‘சிங்கம் 3’ விநியோகஸ்தர்கள் வெளியிடும் ‘துருவங்கள் பதினாறு’

வருகிற டிசம்பர் 29 அன்று வெளிவரவிருக்கும் படம் ‘துருவங்கள் பதினாறு’ . இப்படத்தைப் புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியிருக்கிறார். ரகுமான் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இப்படத்தை ட்ரீம் பேக்டரியுடன் இணைந்து வீனஸ் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் மலர் வெளியிடுகிறார்.

இந்த படத்தை வெளியிடுவது குறித்து மலர் கூறும்போது, நாங்கள் திரையுலகில் அடியெடுத்து வைக்க விரும்பினோம். தரமான எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவரும்படியான படங்களையே வாங்கி வெளியிட நினைத்தோம். ‘சிங்கம் 3’ படத்தை முதலில் சென்னை மாநகரம் வெளியிட வாங்கினோம். முதல் படமே சூர்யா நடித்த ஹரி இயக்கிய பெரிய நட்சத்திர அந்தஸ்துள்ள படமாக அமைந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்து “துருவங்கள் பதினாறு ‘ படத்தைப் பார்த்தோம். புதிய இயக்குநர், புதிய படக்குழு என்று ஆரம்பத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் தான் படத்தைப் பார்த்தோம். ஆனால் படத்தைப் பார்த்த பிறகு எங்கள் அபிப்ராயம் முற்றிலும் மாறி விட்டது.

அந்த அளவுக்கு புத்திசாலித்தனமான திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள் என்று அசத்தியிருந்தார் இயக்குநர் கார்த்திக் நரேன். இப்படம் எல்லாரையும் கவரும் என்கிற நம்பிக்கை வந்து விட்டது . வாங்கி வெளியிடுவது என்று முடிவு செய்தோம். படத்தை வாங்கினோம். டிசம்பர் 29-ல் உலகெங்கும் வெளியிடுகிறோம். ட்ரீம் பேக்டரி எங்களுடன் இணைந்துள்ளது எங்களுக்கு மேலும் ஊக்கமாகவும் பலமாகவும் அமைந்திருக்கிறது.

இவ்வாறு மலர் கூறினார்.