உதயமானது ‘அம்மா தி.மு.க.’ : புதிய கட்சியை தொடங்கினார் இனியன் சம்பத்!!

திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆரம்பகால ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர் ஈ.வி.கே.சம்பத். இவர் தந்தை பெரியாரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார். சம்பத்தின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி சுலோச்சனா சம்பத்துக்கு எம்.ஜி.ஆர். துவங்கிய அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. பின்னாளில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவும் சுலோச்சனா சம்பத்துக்கு வாரியத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை தந்து சிறப்பித்திருந்தார்.

சுலோச்சனா சம்பத்தின் மகன்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி பின்னாளில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராகவும் உயர்ந்தார். ஜெயலலிதாவுக்கு எதிராகவும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எதிராகவும் அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்டு வந்த இளங்கோவனின் தம்பியான ஈ.வி.கே.எஸ். இனியன் சம்பத், கடந்த ஜூன் மாதம் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இவருக்கு மிக முக்கியமான பொறுப்புகள் அளிக்கப்படலாம் என்ற யூகம் நிலவி வந்த வேளையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ம்தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க.வில் முக்கிய பதவி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ள நிலையில் ஜெயலலிதாவை மையப்படுத்தி ‘அம்மா தி.மு.க.’ என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளதாக இனியன் சம்பத் இன்று அறிவித்துள்ளார்.

‘தமிழக அரசியல் கட்சிகளில் எம்.ஜி.ஆர்.  தனது நிலைப்பாட்டில் இம்மியளவும் மாறாமல் உறுதியாக இருந்து அரசியல் அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தார். அந்த திசை வழியில் செல்வதற்காக தொண்டர்களை ஒருங்கிணைத்து இந்த இயக்கத்தை உருவாக்கியிருக்கிறேன்’ என இனியன் சம்பத் கூறினார்.

இக்கட்சியின் இதர பொறுப்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.