நீங்கள் தோற்றுவிட்டு, என்னை திட்டுவதா?: ஜனநாயக கட்சிக்கு ரஷ்ய அதிபர் புதின் பதிலடி!

அமெரிக்காவில் கடந்த 8–ந் தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் ‘பாப்புலர் ஓட்டு’ என்று அழைக்கப்படுகிற மக்கள் ஓட்டுகளை பெருவாரியாக பெற்றாலும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ‘எலெக்டோரல் ஓட்டு’ என்னும் தேர்தல் சபை வாக்குகளை அதிகம் பெற்றதால், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.

இந்த தேர்தல் முறையில் ரஷியாவை சேர்ந்த ஹேக்கர்கள் (சட்டவிரோதமாக மோசடி செய்து நுழைகிறவர்கள்) நுழைந்து மோசடி செய்து விட்டதாக கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் குற்றம் சாட்டி இருந்தார்.

தற்போது அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடன், இதே குற்றச்சாட்டை கூறி இருந்தார். டொனால்டு டிரம்ப் வெற்றி பெறும் வகையில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் கூஷிபேர் 2.0 என்ற மால்வேர் பயன்படுத்தப்பட்டதாகவும், இதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் ஸ்னோடன் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி தோற்றதற்கு, தன்னை திட்டுவதா என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

தலைநகர் மாஸ்கோவில் ஆண்டு இறுதி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது ரஷ்யா மற்றும் சர்வதேச பத்திரிக்கையாளர் கலந்து கொண்டனர்.

அப்போது புதின் பேசியதாவது:-

நாங்கள் எந்த விதிமீறலையும் செய்யவில்லை. நீங்கள் தோற்று விட்டீர்கள். அவ்வளவு தான். டிரம்ப் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டார். யாரும் அவரை நம்பவில்லை என்றாலும் கூட, அதனை கடைசி வரையில் தொடர்ந்து செயல்படுத்தி வந்தார். உங்களையும், என்னையும் தவிர யாரும் அவரை நம்பவில்லை.

அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்புடனான உறவை சீராக வைத்துக் கொள்ள விரும்புகிறேன். பெர்லின் கிறிஸ்துமஸ் மார்க்கெட் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் நாட்டு தூதர் துருக்கியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இருப்பினும், துருக்கி நாட்டுடனான உறவுகள் தொடரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.