தனியார் மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு காலம் பதில் சொல்லும் என வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் பதில் வழங்கியுள்ளார்.
வடமாகாணசபையின் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இந்த விவாதத்தின் போது,
எங்களுடைய மாணவர்கள் இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு சென்று அதிகளவான பணத்தை செலவிட்டு மருத்துவ படிப்பை தொடர்கின்றார்கள்.
எதற்காக நாம் அதிகளவு பணத்தை மற்றைய நாடுகளில் செலவிடவேண்டும்? எனவே வடமாகாணத்தில் தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றை அமைப்பதற்கான விண்ணப்பத்தை புலம்பெயர் தமிழர்களிடம் முன்வையுங்கள்.
புலம்பெயர் தமிழர்களுக்கு 500 கோடி என்பது பெரிய பணம் அல்ல. எனவே அவ்வாறு அவர்களிடம் விண்ணப்பம் ஒன்றை வழங்கி பணத்தை பெற்று தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றை அமையுங்கள்.
அதில் இலங்கையில் மற்றைய பகுதிகளை சேர்ந்த மாணவர்களும், ஏன் வெளிநாட்டு மாணவர்களும் கூட கல்வியை தொடரலாம்.
அதன் ஊடாக எங்கள் மாணவர்களுக்கு அதிகளவு பயன்கள் கிடைக்கும். எனவே அந்த விடயம் தொடர்பாக சிந்தியுங்கள் என எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டார்.
இதற்கு பதிலளித்த பா.சத்தியலிங்கம்,
எங்களுடைய மாணவர்கள் இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் மருத்துவ படிப்பை தொடருவதற்காக அதிகளவு பணத்தை செலவிடுகின்றார்கள். அது உண்மையே.
ஆனால் தனியார் மருத்துவ கல்லூரியை வடக்கில் அமைப்பது தொடர்பாக நான் இப்போதைக்கு பேச விரும்பவில்லை. அதற்கு காலம் பதில் சொல்லும் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.