கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி 12 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட பணம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
இதற்கிடையே கருப்புப் பணத்தை பதுக்கி வைத்து இருப்பவர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு பணத்தை மாற்றி இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை முகமைகள் அவ்வபோது அதிரடி சோதனைகளை நடத்தியது.
சோதனையின் போது அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணம் புதிய 2 ஆயிரம் நோட்டுகளாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று வரை ரூ.3,300 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் வருமான வரித் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதில் ரூ.92 கோடி புதிய நோட்டுகள் அடங்கும்.
734 சோதனைகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளது. நேற்று வரை 3,200 நோட்டீஸ் பல்வேறு தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.







