இந்திய மண்ணில் முதல் சதத்தை பதிவு செய்தார் லோகேஷ் ராகுல்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் 30 ரன்னுடனும், பட்டேல் 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. லோகேஷ் ராகுல், பார்தீவ் பட்டேல் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இருவரும் அரைசதம் அடித்தனர். தொடர்ந்து விளையாடிய பார்தீவ் பட்டேல் 71 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால், லோகேஷ் ராகுல் அரைசதத்தை சதமாக மாற்றினார்.

இது அவரது 4-வது சதமாகும். ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த ஆண்டு சிட்னி டெஸ்டில் சதம் அடித்தார். அதன்பின் இலங்கை தொடரில் கொழும்பில் நடைபெற்ற டெஸ்டில் சதம் அடித்தார். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கிங்ஸ்டனில் நடைபெற்ற போட்டியில் சதம் அடித்தார். தற்போது சென்னை டெஸ்டில் சதம் அடித்துள்ளார். இந்திய மண்ணில் ஐந்தாவது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது முதல் சதமாகும்.