கன்னிப் பெண்களின் இறை வழிபாட்டிற்கு உகந்த மார்கழி!

வட மொழியில் மார்கழி மாதத்தை குறிப்பதை, மார்கசீர்ஷம் என்று கூறுவார்கள். ‘மார்கம்’ என்பது ‘வழி’ என்று பொருள்படும். ‘சீர்ஷம்’ என்பது ‘தலை சிறந்தது, உயர்ந்தது’ என்ற பொருளைத் தரும். இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி உள்ளது என்பதே ‘மார்கசீர்ஷம்’ என்பதன் உண்மைப் பொருளாகும்.

மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த ஒரு நாளில் வைகறைப் பொழுது என்று அழைக்கப்படும் அதிகாலை நேரம்தான் மார்கழி. தெளிவான உள்ளத்துடன், உடலில் சுறுசுறுப்பும் குடிகொண்டிருக்கும் அந்த அதிகாலை நேரமே தேவர்களை வழிபடுவதற்கு சிறந்ததொரு நேரமாக கருதப்படுகிறது. அந்த அதிகாலை நேரத்தில் இறைவனை துயிலில் இருந்து எழுப்பும் விதமாகவே கோவில்களில் திருப்பாவை, திருவெண்பாவை, திருபள்ளி யெழுச்சி பாடப்படுகின்றன. இதனால் தான் ‘திறக்காத கோவில்களுக்கு திறக்கும் மாதம்’ என்று மார்கழியின் மாண்பை எடுத்துரைக்கும் வகையில் கூறிவைத்தார்கள்.

இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை வைத்தால், இறைவழிபாட்டில் இடையூறு ஏற்படும் என்பதற்காகவே அந்த காலத்தில் நமது பெரியவர்கள் மார்கழியில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை வைக்கவில்லை. இது தவிர மற்றொரு காரணமும் உள்ளது. மார்கழிக்கு அடுத்து வரும் தை மாதத்தை சிறப்புடன் கொண்டாட வசதியாக, கரும்பு, நெல், உளுந்து, வாழை, மஞ்சள் போன்றவற்றை வீட்டில் சேர்த்து வைப்பார்கள். இதற்கே அந்த மாதத்தின் பொழுது சரியாக இருக்கும் என்பதாலும் தான் மார்கழி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளை வைப்பது இல்லாமல் போனது.

பொதுவாக ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில்தான் சுப நிகழ்ச்சிகள் இருக்காது. ஆடியில் அம்மன் வழிபாட்டிற்காகவும், புரட்டாசி பெருமாள் வழிபாட்டிற்காகவும், மார்கழி மாதம் அனைத்து தெய்வ வழிபாட்டுக்கும் உரியது. இந்த மூன்று மாதங்களும் தெய்வ வழிபாட்டிற்காகவே பக்தர்களால் ஒதுக்கப்பட்ட மாதங்களாகும். இதில் அனைத்து தெய்வ வழிபாடு உள்ள மார்கழி மாதமே மாதங்களில் மிகவும் உயர்ந்த மாதமாக கருதப்படுகிறது.

இறைவனை சுலபமாக அடையும் வழியானது சரணாகதி. ‘உன்னை தவிர என் வாழ்க்கை துணை வேறுயாரும் இல்லை. என்னை சீக்கிரம் வந்து ஆட்கொள்’ என்று ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளும், பாண்டிய அரசவையில் அமைச்சர் பதவி வகித்தும், ‘அரச பணியை விட, ஆண்டவன் பணியே சிறந்தது’ என்று இறைவழி சென்று அவன் புகழ்பாடி தொழுத நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கவாசகரும் மேற்கொண்டது இந்த சரணாகதியைத்தான்.

அதன் வாயிலாகவே அவர்களின் வாழ்வு உயர்வு பெற்றது.மார்கழி மாதத்தில் இறை வழிபாட்டில் சிவ தலமும், விஷ்ணு தலமும் சிறப்பு பெற்றது. இருப்பினும், இந்த மாதத்தில் அனைத்து கோவில்களிலுமே அதிகாலை நேரங்களில் பூஜை நடைபெறும். அந்த நேரத்தில் கோவில்கள் மட்டுமின்றி, வீட்டிலும் பெண்கள் பூஜை செய்யலாம்.

அதிகாலையில் எழுந்து, வீட்டினை சுத்தம் செய்து, இறைவனை துதித்து வழிபாட்டினை மேற்கொள்ளலாம். இதனால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கூடும். திருவிளக்கில் ஒளியேற்றி, நம் மனதிற்கு பிடித்த தெய்வங்களுக்கு மலர் மாலை அணிவித்து அல்லது உதிரிப்பூக்கள் தூவி, அந்தத் தெய்வங்களைக் குறித்த பக்தி பாடல்களை பாட வேண்டும்.

சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், சுண்டல், கற்கண்டு சாதம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். கன்னிப்பெண்கள் மட்டும் நெய், பால் சேர்த்த உணவைச் சேர்க்கக்கூடாது. நெய் சேர்க்காத சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து சாப்பிடலாம்.