ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டி: 1 ஓட்டத்தால் இலங்கை திரில் வெற்றி!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் இன்று தொடங்கி உள்ளது.

இதில் கொழும்பில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இலங்கை- நேபாள் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற நேபாள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 227 ஓட்டங்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பொயகொடா 83 ஓட்டங்களையும், பண்ட்ரா 48 ஓட்டங்களையும் சேர்த்தனர்.

நேபாள் அணி தரப்பில், அய்ரி 3 விக்கெட்டுகளையும், சர்ரஃப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இதனையடுத்து 228 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய நேபாள் அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தாலும் சீராக ஓட்டங்கள் சேர்க்க ஆரம்பித்தது.

அய்ரி நிதானமாக ஆடி 90 ஓட்டங்களும், அவினாஷ் கார்ன் 40 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன் பின்னர் வந்தவர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, 49.3 ஓவரிலே நேபாள் அணி 226 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து வெற்றியை தவறவிட்டது.

இதனால் இலங்கை அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இன்று நடந்த மற்றொரு போட்டியில் இந்தியா 235 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மலேசியாவையும், வங்கதேசம் 4 விக்கெட்டுகளால் ஆப்கானிஸ்தானையும், பாகிஸ்தான் 9 விக்கெட்டுகளால் சிங்கப்பூரையும் வீழ்த்தி வெற்றி பெற்றன.