தடைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்விற்கு மாருதி வழிபாடு

ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விதத்தில் வலிமை இருக்கின்றது. தெய்வங்களைத் தரிசித்தால் தித்திக்கும் வாழ்க்கை அமையும். நாம் வழிபடுகின்ற விதத்தில், அந்த தெய்வங்கள் நமக்கு வரம் வழங்குகின்றன.

அந்த அடிப்படையில் உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் வலிமைக்கும் உறுதுணையாக இருந்து ஒப்பற்ற வாழ்வு தரும் தெய்வம் அனுமன். அந்த ஆஞ்சநேயப் பிரபுவிற்கு சிறப்பு வழிபாடு செய்ய உகந்த தினம் மார்கழி அமாவாசை தினமாகும்.

அன்றைய தினத்தை ‘அனுமன் ஜெயந்தி’ என்பார்கள். இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி, மார்கழி 13-ந் தேதி (28.12.2016) புதன்கிழமை வருகிறது. அன்றைய தினம் அவருக்கு வடைமாலை அணிவித்து வழிபட்டால் தடைகள் அகலும். அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் வாரிசுகள் உருவாகும். ஆனந்த வாழ்வுதரும் அனுமனை இந்த நாளில் வழிபட்டால் பேரும், புகழும், பெருமையும் வந்து சேரும்.