இலங்கையில் மருந்து தொழிற்சாலைகளை ஆரம்பிக்க போகும் 22 இந்திய நிறுவனங்கள்

இந்தியாவின் மருந்து தயாரிக்கும் 22 நிறுவனங்கள், இலங்கை அரச மருந்து கூட்டுத்தாபனத்துடன் இணைந்து இலங்கையில் மருந்துகளை தயாரிக்கும் 22 புதிய தொழிற்சாலைகளை ஆரம்பிக்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் 5 புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதனடிப்படையில், அடுத்த சில வருடங்களின் இலங்கைக்கு தேவையான சகல மருந்துகளை உள்நாட்டில் தயாரிக்க முடியும் எனவும் அது சேனக்க பிபிலே மருந்து கொள்கையின் மற்றுமொரு நோக்கத்தை நிறைவேற்றும் நடவடிக்கை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு தேவையான மருந்துகளில் 95 வீதமான மருந்து தற்போது இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

தேசிய மருந்து தேவையில் 5 வீத மருந்துகளை மாத்திரமே அரச மருந்து கூட்டுத்தாபனம் தயாரித்து வருகிறது.

இதனால், பல பில்லியன் ரூபா வருடாந்தம் வெளிநாடுகளுக்கு செல்கிறது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.