ஜனாதிபதி மைத்திரியின் மாத சம்பளம் எவ்வளவு?

தனக்கான மாத சம்பளம் 95000 ரூபா எனவும், அதனை அதிகரிக்குமாறு தாம் ஒரு போதும் கேட்டதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்…

கடுமையான கடன் சுமையில் சிக்கியுள்ள குறைந்த வருமானம் ஈட்டும் நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில், இதனை விடவும் எளிமையான வாழ்க்கை முறைமை குறித்து சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

திட்டமிட்ட கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் பற்றி பேசுகின்றோம். எனினும் அரச நிறுவனங்களில் காணப்படும் திட்டமிட்ட ஊழல் மோசடிகள் பற்றி பேசுவதில்லை.

ஒரு திணைக்களத்தில் சீ.சீ.ரீ.வி கமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போது வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி அதனை தடுத்து நிறுத்த முயற்சிப்பதன் ஊடாக எமது சமூகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பது புலனாகின்றது.

அரச நிறுவனங்களின் விலை மனுக் கோரல்கள், தொழில்நுட்ப மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன.

அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை தடுக்க முடிந்தால் வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.