காதல் மனைவியை கொலை செய்த கணவன்: நெஞ்சை உலுக்கும் காரணம்

கர்நாடகா மாநிலத்தில் ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதால் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை அவரது கணவர் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்ரதுர்கா மாவட்டம் ஜோகிமட்டி பகுதியை சேர்ந்த சஷிகுமார் என்பவர் பாக்யம்மா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

12 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். மூன்று பெண் குழந்தைகள் பிறந்த பிறகு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதால் தன் மனைவியை தினமும் துன்புறுத்த தொடங்கியுள்ளார்.

துன்புறுத்தல் தொடர்ந்து கொண்டு இருக்கவே, தன் மனைவிக்கு விஷம் கொடுத்த சஷிகுமார் கொலை செய்துள்ளார். பின்னர் அவரை மின்விசிறியில் மாட்டி விட்டு தற்கொலை என்று சொல்லிவிடலாம் என்று முயற்சி செய்துள்ளார்.

பாக்யம்மாவின் பெற்றோர், தங்கள் மகள் வீட்டில் நடக்கும் பிரச்னை குறித்து தொடர்ந்து சொல்லி வந்தார். நாங்களும் பேசி தீர்த்து வைப்போம். ஆனால் அது கொலை வரை செல்லும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறினர்.

கொலை செய்த குற்ற உணர்ச்சியால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சஷிகுமார் தற்போது சித்ரதுர்கா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் உடல் நலம் தேறி சஷிகுமார் டிஸ்சார்ஜ் ஆனதும் விசாரணையை தொடங்க உள்ளனர்.