இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா திடீர் கைதின் பின்னணி!

பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், ராஜபக்‌ச தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்த கருணா இலங்கையில் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா என்கிற விநாயகமூர்த்தி. பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்தவர்.

பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து தனிப் படையை பிரித்து வெளியேறியவர், அரசியலில் குதித்தார். அதன் பின்னர் ராஜபக்‌சவின் ஆதரவாளராக மாறி, அவரின் அமைச்சரவையிலும் இடம்பிடித்தார்.

2009-ம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரின் போது, விடுதலைப் புலிகளின் இரகசிய செயல்பாடுகளை இலங்கை இராணுவத்துக்குச் சொல்லியவர் இவர் தான் என்றும் சொல்லப்படுகிறது.

தேர்தலில் ராஜபக்‌ச அரசு படுதோல்வியடைந்ததையடுத்து, ராஜபக்‌ச அரசு மீதான பழைய வழக்குகள் எல்லாம் தூசு தட்டி எடுக்கப்பட்டன.

அதன்படி ராஜபக்‌சவின் சகோதரர், குடும்பத்தினர் மீது வழக்குகள் போடப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், ராஜபக்‌ச ஆட்சியில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், கருணாவை விசாரணைக்கு அழைத்துச்சென்ற இலங்கை போலீஸார், விசாரணையின் முடிவில் கைது செய்தனர்.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியது, வாகனம் வாங்கியதில் நிதி முறைகேடு போன்ற புகார்கள் அவர் மீது கூறப்பட்டுள்ளது.

2 மணி நேர விசாரணைக்குப் பின்னர் அவரை கைது செய்த இலங்கை போலீஸார், அவரை கைது செய்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

ராஜபக்‌ச தலைமையிலான அமைச்சரவையில், கருணாவுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.

ஒருமைப்பாடு மற்றும் கலாசாரம் சார்ந்த இலாகா தான் ஒதுக்கப்பட்டிருந்தது. ராஜபக்‌ச அமைச்சரவையில் தமிழ்ப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் இவர் ஒருவரே.

அது மட்டுமல்லாமல் விடுதலைப் புலிகள் குறித்த முழு விவரங்களையும் அறிந்தவர் ஆவார். பிரபாகரனுடன் மிக நெருக்கமாக இருந்தவர்.

இவற்றோடு இணைத்து பார்க்கையில், கருணா இலங்கை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே சிறிசேன அரசு பதவியேற்ற பிறகு, ராஜபக்‌ச அரசு மீதான பல புகார்கள் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கருணா கைது என்பது மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

விடுதலைப் புலிகள் மீதான் போர் குறித்த முழுமையான விவரங்கள் அறிந்தவர் கருணா.

இவரின் கைது இலங்கை அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றன.