பிடல் காஸ்ட்ரோ ஒரு கொடுமையான சர்வாதிகாரி! டொனால்ட் ட்ரம்ப் கருத்து!

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ கொடுமையான சர்வாதிகாரியாக செயல்பட்டார் என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

கியூபாவில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர் பிடல் காஸ்ட்ரோ. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் பிடல் காஸ்ட்ரோ.

கடந்த 2008-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகிய பிடல் காஸ்ட்ரோ, தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவை கியூபா அதிபராக்கினார்.

அதன் பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அவர் காலமானார்.

பிடல் காஸ்ட்ரோ மறைவை அந்த நாட்டு மக்கள் பெரும் துக்கதினமாக அனுசரித்து வருகின்றனர்.

காஸ்ரோவின் மறைவிற்கு உலகம் முழுவதும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், பிடல் காஸ்ட்ரோ ஒரு மிருகத் தன்மை மிகுந்த கொடுமையான சர்வாதிகாரியாக செயல்பட்டார். சொந்த நாட்டு மக்களையே நீண்ட ஆண்டுகள் ஒடுக்கி வைத்திருந்தார். கியூபா ஒரு சர்வாதிகார நாடாக இருந்தது. இனி அந்த நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், காஸ்ட்ரோ மறைந்து விட்டார் என்ற வாசகத்தோடு ஆச்சரியக் குறியோடு முடித்துள்ளார்.