யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கான நிதியைக் குறைத்துவிட்டு நல்லிணக்கம் பற்றிப் பேசுவது வெக்கக்கேடு!

யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கான நிதியை 500 மில்லியனால் குறைத்துவிட்டு நல்லிணக்கம் தொடர்பாக அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்துவது வெக்கக்கேடான செயல் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதிநிலை தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விடுதிப் பிரச்சனை உள்ளது. தண்ணீரை மாணவர்கள் காசு கொடுத்து வாங்கும் நிலை உருவாகியுள்ளது. சாப்பாடும் 60ரூபாவுக்கே விற்கப்படுகின்றது. இவ்வாறு பல பிரச்சனைகளுக்கு பல்கலைக்கழகம் முகம் கொடுத்துக்கொண்டிருக்கும்போது ஏனைய பல்கலைக்கழகங்களை விட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கே அதிகளவு நிதியை ஒதுக்கியிருக்கவேண்டும். ஆனால் அது குறைக்கப்பட்டுள்ளது.

இப்படி நிதியைக் குறைத்துள்ள அரசாங்கம் எதிர்க்கட்சித் தலைவரிடம் நல்லிணக்கம் தொடர்பாகப் பேசுவதற்கு வெக்கப்படவேண்டும்.

அத்துடன் ராஜபக்ஷக்களின் அரசியல் பலத்தினாலேயே மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டது. பல்கலைக்கழகங்களுடன் அதனை ஒப்பிடவேண்டாம். சட்டவிரோதமான குறித்த நிறுவனத்தை இழுத்து மூடவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.