ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பதவி மஹிந்தவுக்கு கிடைக்குமா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக மீண்டும் நியமிக்குமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொரலஸ்கமுவையை சேர்ந்த கே.டீ.அருண பிரியஷாந்த மற்றும் மத்தேகொட அஸங்க நந்தன ஸ்ரீநாத் என்பவர்களினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பான விசாரணை, கொழும்பு மாவட்ட நீதிபதி யூ.என்.வீ.குணவர்தன முன்னிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுப்பில் பொறுப்பு கூற வேண்டியவர்களாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கட்சிக்கு தலைவர் ஒருவரை நியமிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதுடன், பொதுச் செயலாளர் தவறு செய்துள்ளதாகவும், அதனை சரிப்படுத்துமாறும் மனு தாக்கல் செய்த தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய தலைவராக சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.